ரமழானில் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியம் தொடர்பான வழிகாட்டல்கள்: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.

இஸ்லாத்தில் எந்தவொரு வணக்க வழிபாடையும், செயற்பாடையும் நோக்கினால் இதில் மனிதனின் உயிருக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். 
நோன்பைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது, ‘நோன்பு நோற்று ஆரோக்கியம் பெறுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.


ரமழானில் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியம் தொடர்பான வழிகாட்டல்கள்:


1. எமது இப்தார் மற்றும் ஸஹ்ர் உடைய நேரங்களில் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை பின்பற்றல்.

2. கொவிட் 19 வைரஸ் தாக்கம் தொடர்ந்தும் இருப்பதனால் இந்த ரமழான் மாதத்தில் கூட்டு அமல்களில் ஈடுபடும்போது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டல்களையும் பின்பற்றுதல்.

3. ரமழான் காலத்தில் ஆரோக்கியமான தூக்க பழக்கவழக்கங்களை பின்பற்றல்.

4. எமது வீட்டிலுள்ள சிறார்களும் எம்முடன் இணைந்து நோன்பு நோற்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பர். எனவே, அவர்கள் நோன்பு நோற்கும் விடயத்தில் அவர்களின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளல்.

5. கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் பெண்கள் ஆகியோர் நோன்பு நோற்பதில் சில சலுகைகள் இஸ்லாத்தில் வழங்கப்பட்டுள்ளது. அவைகளை பின்வரும் இணையதள இணைப்பினூடாக பார்வை இடலாம்.

6. நேன்பு நோற்க சக்தியற்ற வயோதிபர்களுக்கும் நிரந்தர நோயாளிகளுக்கும் நோன்பு நோற்காமல் இருப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கின்றது. அதேநேரம் அந்த ஒவ்வொரு நோன்புக்காகவும் அவர்கள் ஒரு مُد (முத்து) அரிசியை ஃபித்யாவாக கொடுக்க வேண்டும். ஒரு مُد (முத்து) என்பது 600 கிராம் ஆகும்.

எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா இந்த ரமழான் மாத நோன்பை ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் நோற்பதற்கு அருள் புரிவதோடு, நமது நாட்டையும் உலக மக்களையும் கொடிய நோய்களிலிருந்து பாதுகாத்தருள்வானாக.


வஸ்ஸலாம்.

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர் 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

குறிப்பு: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகள் தத்தம் பிரதேசத்தில் காணப்படும் மஸ்ஜித்களில் மேற்படி வழிகாட்டல்களை எதிர்வரக்கூடிய ஜும்ஆ தினத்தில் பொது மக்களுக்கு வாசித்துக் காட்டுவதற்கான ஏற்பாடுகளை மஸ்ஜித் நிர்வாகிகள் மூலம் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

Spread the love பகிர்ந்து கொள்ள